காரைக்கால்,அக்.30: தீபாவளி வேட்டி, சேலை மற்றும் சர்க்கரை, அரிசியை புதுச்சேரி அரசு உடனே வழங்க வேண்டும். என, காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ அசனா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து, காரைக்கால் தெற்குத்தொகுதி எம்எல்ஏ அசனா கூறியது: புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி, இலவச சர்க்கரை, அரிசி மற்றும் வேட்டி -சேலை வழங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு இதுவரை அதுதொடர்பாக ஆலோசிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறையும் இணைந்து தீபாவளி பல்பொருள் அங்காடி திறப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால் நடப்பாண்டு இதுவரை அப்படி திறப்பது தொடர்பாகவும் எந்தவித செயல்பாடுகளும் நடைபெறவில்லை. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற பாப்ஸ்கோ பல்பொருள் சிறப்பு அங்காடியை திறக்காமல் இருப்பதும், பண்டிகை காலத்திற்கு பயன்படும் சர்க்கரை, அரிசி மற்றும் வேட்டி-சேலைகளை வழங்காததும் பெரும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.