பண்ருட்டி அருகே கத்தியை காட்டி 2 பேரிடம் பணம் பறிப்பு

பண்ருட்டி, அக். 26: பண்ருட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி லாரி டிரைவரிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளத நாமக்கல் மாவட்டம் பின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் முருகேசன் (33), லாரி டிரைவர். இவர் கடலூர் மாவட்டம் ராசாப்பாளையம் கிராமத்துக்கு மரவள்ளி கிழங்கு லோடு ஏற்ற வந்துள்ளார். தொழிலாளர்கள் வராததால் சென்னை சாலையில் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் டிரைவர் சீட் அருகே வந்து தீப்பெட்டி கேட்டுள்ளனர். டிரைவர் தீப்பெட்டி எடுத்து கொடுத்த போது, அவர்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரூ.300 பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து முருகேசன் பண்ருட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்சமத் மகன் ரசாக் (47) என்பவரிடம் கத்தியை காட்டி 2 மர்ம நபர்கள் பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றனர். கடந்த 22ம் தேதியன்று ரசாக், விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டியை நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது கண்டரக்கோட்டை மேம்பாலத்தில் நின்றிருந்த 2 மர்ம நபர்கள் பைக்கை நிறுத்தி தீப்பெட்டி கேட்டுள்ளனர்.

 அப்போது அவர் சட்டை பையில் இருந்து தீப்பெட்டி எடுத்து கொடுத்த போது, கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.8 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து ரசாக் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பண்ருட்டி பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: