காஞ்சிபுரம், அக்.25: காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் செவிலிமேடு காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதன்படி காஞ்சிபுரத்தில் உள்ள 180 சிவாலயங்களிலும் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்தவகையில் செவிலிமேட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு வெண்டைக்காய் புடலங்காய் சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறி மற்றும் வாழைப்பழம் ஆப்பிள் சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த அலங்காரத்தில் சிவனை தரிசனம் செய்வதால் ஆண்டு முழுவதும் உணவிற்கு குறையிருக்காது என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமி தரிசனம் செய்ய வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.