விளங்கனூர் கிராமத்தில் சேதமடைந்த உபரி நீர் கால்வாய் தடுப்பணை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

செய்யூர், மே 29: சித்தாமூர் அருகே ஏரிகளில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாய் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் மழைநீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கட்டு தேவாத்தூர், விளங்கனூர் ஏரிகள், மழைக்காலங்களில் முழு கொள்ளளவு அடையும் பட்சத்தில் உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறி நல்லூர், இரும்பேடு ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடைகிறது.

இவ்வாறு வெளியேறும் உபரி நீரை தேக்கி வைக்க, விளங்கனூர் பேருந்து நிறுத்தம் அருகே கால்வாயில் சிறிய அளவிலான தடுப்பணை கட்டப்பட்டது. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டது. தடுப்பணை பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில், தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, சேதமடைந்த தடுப்பணையை அகற்றிவிட்டு புதிய தடுப்பணைகள் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post விளங்கனூர் கிராமத்தில் சேதமடைந்த உபரி நீர் கால்வாய் தடுப்பணை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: