மதுரை, அக். 18: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி, பூ, பழமார்க்கெட், மதுரை மாநகர் முக்கிய கடைவீதிகளில் பூஜைப்பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது. பூஜைப்பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகம் வந்தது. ஆயுத பூஜையையொட்டி, வீடுகள், மற்றும் தொழில் நிறுவனங்களில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி, வண்ண மலர்களால் அலங்கரித்து, சுவாமிக்கு பொறி,கடலை, பழங்கள் படைத்து வழிபடுவது வழக்கம். திருஷ்டிக்காக, வெள்ளை பூசணியை வீடுகள், தொழில் நிறுவனங்கள் முன்பு உடைப்பர். இதற்காக, மாநகர் பகுதிகளின் சாலையோரங்களில் வெள்ளைபூசணி, சாம்பல் பூசணி அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறு வாழைக்க கன்றுகள், மரங்கள் அதிகளவில் கொண்டுவரப்பட்டு ஜோடி ரூ.50லிருந்து ரூ.200வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பூஜையில் முக்கிய இடம்பிடிக்கும் பொரி, கடலை, வெல்லம் உள்ளிட்ட பூஜைப்பொருட்களின் விலையும் சற்றே உயர்ந்து விற்பனையானாலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், சிம்மக்கல் பழ மார்க்கெட்டில் பூ மற்றும் பழங்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால், மாநகர் வீதிகள் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.