சிதம்பரம், அக். 17: பருவநிலை மாற்றத்தினால் தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழைக்காலத்தில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் காலி பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தி வருகிறது. காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதும், டெங்கு கொசுக்களை உருவாக்கும் காலி குடிநீர் பாட்டில்கள் குவியலாக கிடந்ததும் ஆய்வுக்கு வந்த நகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று காலை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா, சுகாதார ஆய்வாளர்கள் பால் டேவிஸ், தர்மராஜன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராஜாராம், காமராஜ், ஆனந்தகுமார், தூய்மை பணி மேற்பார்வையாளர் சுதாகர் உள்ளிட்ட அலுவலர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.