மன்னார்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு

மன்னார்குடி, செப்.25: மன்னார்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ 5 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மன்னார்குடி அருகில் உள்ள மேலதளிக்கோட்டை கிராமத்தில் பாலசக்தி விநாயகர் மற்றும் காமாட்சியம்மன் கோயில் உள்ளது. நேற்று அதிகாலை இக்கோயிலுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கோயிலில் கிரில் கேட்டை உடைத்து கொண்டு கருவறைக்குள் நுழைந்தனர். பின்னர்  அவர்கள்  அம்மனின் கழுத்தில் நகைகள் ஏதேனும் உள்ளதா என பார்த்துள்ளனர். அம்மன் கழுத்தில் தங்க நகைகள் எதுவும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை அடியோடு பெயர்த்து எடுத்து கொண்டு கோயிலுக்கு அருகில் உள்ள இடத்தில் வைத்து உண்டியலை உடைத்துள்ளனர். அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த  சுமார் ரூ 5 ஆயிரத்தை மட்டும் எடுத்து கொண்டு உண்டியலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.  இந்நிலையில் நேற்று காலை கோயில் வழியே சென்ற பொது மக்கள் சிலர் கோயிலின் கதவு உடைக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து  கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்களிடம் கூறினர். இது குறித்து தகவல் அறிந்து பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி உத்தரவின் பேரில் போலீசார் கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: