பிரபல கொள்ளைக்காரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

சேலம், செப்.21: சேலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில், பிரபல கொள்ளைக்காரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.சேலம் பெரியகொல்லப்பட்டி மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் மைதிலி(38). பிரபல கொள்ளைக்காரியான இவர் மீது சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருக்கிறது.  குடிக்க தண்ணீர் கேட்டு செல்வது போல வீட்டுக்குள் சென்று, மின்னல் வேகத்தில் நகைகளை திருடிச்சென்று விடுவார். தொடர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதால், கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு மைதிலி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சில வழக்குகளில் தண்டனையும்  வழங்கப்பட்டது. தற்போது வேலூர் பெண்கள் கிளைச்சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் புகுந்து, 25 பவுன் நகை, ₹30 ஆயிரத்தை கடந்த 2014ம் ஆண்டு மைதிலி திருடிய வழக்கு, சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், வேலூர் சிறையில் இருந்து மைதிலியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், கொள்ளைக்காரி மைதிலிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ₹1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் மைதிலி வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related Stories: