பெண் வியாபாரியிடம் ₹2.40 லட்சம் அபேஸ்

சேலம், செப்.21: சேலத்தில் பெண் வியாபாரியிடம் ₹2.40 லட்சத்தை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அருகேயுள்ள ஓமலூர் பாகல்பட்டியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி செல்வி(48). பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். மேட்டுப்பாளையத்தில் இருந்து பூண்டு வாங்கி வந்து சேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை மேட்டுப்பாளையம் செல்வதற்காக  பாகல்பட்டியில் இருந்து சேலம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்சில் வந்தார். அப்போது பூண்டு வாங்குவதற்காக ₹2.40 லட்சத்தை கொண்டு வந்திருந்தார். பஸ்சில் இருந்து இறங்கி பார்த்தபோது, பணம் வைத்திருந்த பையை காணவில்லை.  இதனால் அலறி அடித்துக்கொண்டு பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். 5 ரோடு பகுதியில் பஸ் வரும்போது பெண் ஒருவர் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை அபேஸ் செய்து சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories: