அறந்தாங்கி, செப். 21: தினகரன் செய்தி எதிரொலியாக பட்டுக்கோட்டை - காரைக்குடி அகலப் பாதையில் டெமு ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே ரூ.300 கோடி மதிப்பீட்டில் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டது. அகலப் பாதை பணிகள் முடிந்ததை தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் டெமு ரயில் இயக்கப்பட்டது. இந்த தடத்தில் உள்ள 32 லெவல் கிராசிங்குகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் ரயில் ஓட்டுனரே லெவல் கிராசிங்குகளில் ரயில்வே கேட்டுகளை மூடி திறக்க வேண்டி இருந்தது. இதனால் பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே பயண நேரம் சுமார் 3.30 மணி நேரமாக உள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் பல மடங்கு குறைவாக இருந்த போதிலும் பயண நேரம் அதிகமாக இருந்ததால் பயணிகள் டெமு ரயிலில் பயணம் செய்ய விரும்பவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம் டெமு ரயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை என காரணம் காட்டி கடந்த மாதம் ரயில் சேவையை நிறுத்தியது.