ஆட்டையாம்பட்டி, செப்.19: ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சீரமைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி காந்தி நகரில், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து பல வீடுகளில் உள்ள தறி பட்டறைகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள 3 பீஸ் கேரியரில் 2 பழுதடைந்ததால், நேரடி மின்இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, வீடுகளில் தீப்பொறி பறந்தது. இதனால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில், கடந்த 12ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.