மேலூர், ஆக. 15: மேலூர் திருவாதவூர் ரோட்டில் அமைந்துள்ள நாகம்மாள் கோயில் திருவிழாவிற்காக 15 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் விரதம் இருக்க துவங்கினர். நேற்று காலை மண் கட்டி தெப்பக்குளம் அருகில் சிறப்பு பூஜைகள் செய்த பெண்கள் அங்கிருந்து பால் குடம் ஏந்தி மேலூரின் பெரியகடை வீதி, திருச்சி ரோடு, செக்கடி வழியாக கோயிலை சென்றடைந்தனர். தொடர்ந்து ஆண்கள் 5 அடி முதல் 30 அடி நீளம் வரை அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். ஒரே அலகை 2 மற்றும் 3 பக்தர்கள் சேர்ந்து குத்தி ஊர்வலமாக சென்றனர். இத்துடன் பெண் பக்தர்கள் மட்டுமல்லாது திருநங்கைகளும் அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.