மன்னார்குடி, ஆக.14: திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் அங்கீகாரம் பெற்ற எட மேலையூர் பாண்டியன் கபாடி கழகம் வடுவூர் அருகே உள்ள எடமேலையூரில் கமல் ராஜேஷ் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான சூப்பர் சீனியர் ஆண்கள் பிரிவு கபாடி போட்டிகளை கடந்த இரு தினங்களாக நடத்தியது. இப்போட்டிகளில் சென்னை எஸ்ஆர்எம் அணி, மத்திய தபால் துறை அணி, தென் மண்டல காவல்துறை அணி, மயிலாடுதுறை, சென்னை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிகள், கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் அணி மயிலாடுதுறை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியையும், மத்திய தபால் துறை அணி தென் மண்டல காவல்துறை அணியையும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.