ஆண்டிபட்டி, ஆக. 14: ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி நான்கு மாத காலமாகியும் மின்துறையினர் நடவடிக்கை எடுக்காததால்,பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இங்கு கிழக்குப் பகுதியில் முதலக்கம்பட்டி செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் 15க்கும் மேற்பட்ட மோட்டார் பம்பு செட்டிகளும், லட்சுமிபுரம் காலனி மக்களின் குடிநீர் தேவைக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 4 மாதத்துக்கு முன்பு பெய்த விழுந்த இடியினால் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது. இதனை சரிபார்ப்பதற்காக கழற்றிச் சென்ற பெட்டியை பழுதை சரிபார்த்து இதுவரை மாற்றவில்லை. இதனால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் தண்ணீரின்றி காய்ந்து காணப்படுகின்றன. இது மட்டுமின்றி தென்னை மரங்களும் காய்ந்து வருகின்றன. மேலும் லட்சுமிபுரம் காலனிக்கு மின்சப்ளை இல்லாததால் ஆழ்துளை கிணறு இயங்காமல் உள்ளது. இதனால் குடிநீருக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பால்பாண்டி கூறுகையில், ` விவசாயிகளின் தேவைக்காக போடப்பட்ட டிரான்ஸ்பார்மர், இடி விழுந்து சேதம் அடைந்த பெட்டியை பல மாதங்களாகியும் மின்துறையினர் பழுதை நீக்கி மாற்றவில்லை.