கும்பகோணம், ஆக. 7: கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.1.5 கோடி மதிப்பில் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் 550 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு நபார்டு வங்கி உதவியுடன் கல்வித்துறை மூலம் ரூ.1.5 கோடியில் 10 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டப்பட்டது. இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.