கோவை, ஆக. 7: கோவை கரும்புக்கடை-நஞ்சுண்டாபுரம் இடையிலான இணைப்பு சாலை திட்டத்தை கைவிட கோரி, சாரமேடு பகுதி மக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று நடந்தது. கரும்புகடை சாரமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் இணைப்பு சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: சாரமேடு பகுதியில் கடந்த 1970ம் ஆண்டு முதல் பட்டா பெற்று குடியிருந்து வருகிறோம். இந்நிலையில், உக்கடம் மேம்பாலம் பணி காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு சாலை கரும்புகடை முதல் நஞ்சுண்டாபுரம் வரை 6 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, இப்பகுதியில் உள்ள 300 குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே, உள்ள சாலைகளை மேம்படுத்தினால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை அரசிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர். எம்.எஸ்.எம்.இ சட்ட மசோதவை மறுபரிசீலனை செய்ய கோரி மனு: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள எம்.எஸ்.எம்.இ சட்ட மசோத சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் எனவே, அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.