புவனகிரி, ஜூன் 21: பரங்கிப்பேட்டையில் அண்ணங்கோயில் என்ற இடத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினமும் சின்னூர், புதுபேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 200க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருவர். இங்கிருந்து மீன்களை சிறு வியாபாரிகள் வாங்கி சென்று சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்வர். மொத்த வியாபாரிகளும் மீன்களை ஏலத்தில் எடுத்து கோவா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பர். சுமார் 2 மாத மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு, கடந்த நான்கு தினங்களாகத்தான் மீனவர்கள் இப்பகுதியில் கடலுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் போதிய மீன்கள் கிடைக்காததால் இப்பகுதியில் மீன்பிடி தொழில் களை இழந்துள்ளது.
குறிப்பாக மீனவர்கள் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறும் மீனவர்கள், இதுகுறித்து அரசிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர். இதனால் கடலுக்கு சென்றாலும் அதிக மீன்கள் கிடைக்காது என்பதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே வெளி மாநிலங்களுக்கு மீன்களை ஏற்றிச் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் செல்லாமல், ஒருசில வாகனங்கள் மட்டுமே செல்கிறது. இதனால் மீன்பிடி தொழில் இப்பகுதியில் நலிவடைந்து, மீனவர்களும், மீன் வியாபாரிகளும் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.