மதுரை, ஜூன் 21: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால், தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி மற்றும் மருத்துவச் சுற்றுலா மேம்படும் என ன வர்த்தக சங்கத்தினர் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலைத்தலைவர் ரத்தினவேல் ஆகியோர் கூறுகையில், ‘மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியின் அடிப்படையில் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் உள்ளது என தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கம் சார்பில், டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உயர்மட்ட தேர்வுக்குழுவினர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோரை சந்தித்து மனு அளித்தோம். மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்முனைவோர் மதுரை-தூத்துக்குடி தொழில் பெருவழிச்சாலையில் தொழில்களை துவங்க முன்வருவர். இதனால், தென்தமிழகத்தில் தொழில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சுற்றுலாத்துறை, குறிப்பாக, மருத்துவச் சுற்றுலா மேம்படும். ரூ.1,500 கோடி மதிப்பில் 750 படுக்கை வசதியுடன், மருத்துவக்கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் உயர் மருத்துவ ஆராய்ச்சிக் கல்வி ஆகிய கட்டமைப்புகளுடன் கூடிய இந்த மருத்துவமனையை விரைந்து கட்டி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்’ என்றனர்.