பேரையூர், ஜூன் 21: பேரையூரில் பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக இருக்கும் பைபாஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள பைபாஸ் சாலை நகரின் முக்கிய சாலையாக திகழ்கிறது. இந்த வழியாகச் சென்றால் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரைவாக இணையலாம். எனவே சிவகாசி, ராஜபாளையம், நெல்லை, குற்றாலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் பேரையூர் பைபாஸ் சாலை வழியாக சென்று வருகின்றன. லட்சுமிபுரம், சந்தையூர், மேலப்பட்டி, கீழப்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, சிலைமலைப்பட்டி, கூவலப்புரம் உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் அவ்வூர் மாணவர்கள் இந்த சாலை வழியாக சென்று வருவதால், எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கம். இந்த நிலையில், இச்சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.