பெரம்பலூர் அருகே தகாத உறவை அம்பலப்படுத்தியதால் பயங்கரம் வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

குன்னம்: பெரம்பலூர் அருகே தகாத உறவை அம்பலப்படுத்திய வாலிபர், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மங்களமேடு அருகே நமையூர் கிராமம் நரியோடை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ரஜினி (43). இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அல்லித்துரை மகன் அஜித் (26). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஈஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அஜித், கடந்த மாதம் இரண்டாவதாக சாந்தி என்பவரை திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் ரஜினிக்கு, அதே பகுதியை சேர்ந்த 40வயது பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனை பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். என்றாலும் கணவர் வெளியூர் செல்லும் நேரங்களில் ரஜினியை தனது வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அஜித், ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் இந்த தகாத உறவை அம்பலப்படுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஜினி, தகாத உறவை அம்பலப்படுத்தி தன்னை அவமானப்படுத்திய அஜித்துக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.  நேற்று முன்தினம் வியாபாரத்துக்கு சென்ற ரஜினி இரவு சீக்கிரமாகவே வீடு திரும்பினார். பின்னர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பைக்கில் அஜித் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு பைக்கில் மறைத்து வைத்திருந்த பால்ரஸ் குண்டுகள் நிரப்பப்பட்ட உரிமை பெறாத நாட்டுத்துப்பாக்கியால் அஜித்தை சுட்டார். இதில் அவரது தோள் மற்றும் கையில் குண்டுகள் துளைத்து அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஜித் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் ரஜினி துப்பாக்கியுடன் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நேற்று மாலை சரண் அடைந்தார்.

Related Stories: