சேலம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சை வரத்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி, ஜர்த், மிர்சேஜ், பண்டரிபூர், சோலாப்பூர், கோலாப்பூர், மணிராஜா உள்ளிட்ட பகுதிகளில் சீட்லெஸ் (விதை இல்லாத) திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் திராட்சை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா பகுதிகளில் சீட்லெஸ் திராட்சை அமோக விளைச்சலை தந்துள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் திராட்சையை இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சையின் வரத்து அதிகரிப்பால் விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.