ஒடிசாவில் டிரைவர்கள் ஸ்டிரைக் மணப்பெண் வீட்டிற்கு 28 கிமீ நடந்து சென்ற மணமகன்: இரவு முழுவதும் பயணம் செய்து தாலி கட்டினார்

புவனேஸ்வர்: ஒடிசாவில் டிரைவர்கள் ஸ்டிரைக்கால் மணப்பெண் வீட்டிற்கு 28 கிமீ நடந்து சென்று மணமகன் தாலி கட்டினார். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒடிசாவில் இன்சூரன்ஸ், ஓய்வூதியம், நல வாரியம் அமைத்தல் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை வலியுறுத்தி டிரைவர்கள் சங்கம் ஸ்டிரைக் நடத்தியது. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான டிரைவர்கள் பங்கேற்றனர். ராயகடா மாவட்டத்தில் ஒரு திருமணத்திற்காக மணமகன் வீட்டார் வாகனம் ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் டிரைவர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வராததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே அவர்கள் கல்யாண்சிங்பூர் தொகுதிக்கு உட்பட்ட சுனகண்டி பஞ்சாயத்து பகுதியில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள திபாலபாடு கிராமத்தில் இருக்கும் மணப்பெண் வீட்டிற்கு நடந்தே சென்றனர். இரவு முழுவதும் மணமகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பெண்கள் உள்ளிட்டோர் நடந்தே 28 கிமீ கடந்து சென்று மணமகள் வீட்டை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு நேற்று காலை திருமணம் நடந்தது. மணமகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நடந்தே சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: