மும்பை: மும்பை மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜ சார்பாக பிரசாரம் செய்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘‘பாம்பே மகாராஷ்டிராவின் நகரம் அல்ல; பாம்பே ஒரு சர்வதேச நகரம்’ என்று பேசினார் .மேலும், ரூ.40,000 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யும் பாம்பே மாநகராட்சியை நிர்வகிக்க பாஜ மேயர் தேவை. மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, மேயர் மூன்று இன்ஜின் அரசு இருந்தால்தான் மும்பையை திறம்பட நிர்வகிக்க முடியும்’’ எனவும் கூறியிருந்தார்.
இந்த பேச்சு மராட்டிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், இதற்கு சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘மும்பை மாநகரின் பெயரை மீண்டும் பாம்பே என்று மாற்றி அதை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க பாஜ திட்டமிடுகிறது’ என குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், ‘அண்ணாமலையை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ‘தமிழ்நாட்டில் இருந்து ஒரு ‘ரஸ்மலை’ (வெளிமாநிலத்தை சேர்ந்தவர்) வந்துள்ளார். உங்களுக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம்? எனது சித்தப்பா பால்தாக்கரே 1960ம் ஆண்டுகளில் தென் இந்தியர்களுக்கு எதிராக பயன்படுத்திய கோஷத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டியவரும்.
மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்க பாஜ நினைக்கிறது, மராட்டிய மக்களுக்கான கடைசி போர் இது’ என்று ஆவேசமாக எச்சரித்தார்.இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜ செய்தித்தொடர்பாளர் ஷைனா என்சி, ‘ராஜ் தாக்கரேவின் பேச்சு தரம் தாழ்ந்தது’ என விமர்சித்துள்ளார்.
* அண்ணாமலையின் இந்தி சரியில்லை பட்நவிஸ் சப்பைக்கட்டு
அண்ணாமலை பேசியது குறித்து முதல்வர் பட்நவிஸ் கூறுகையில், ‘‘அண்ணாமலையின் இந்தி சரியில்லை. அதனால் தான் அவர் மும்பை என்பதற்குப் பதிலாக பாம்பே என்று கூறிவிட்டார். வேண்டுமென்றே அவ்வாறு அவர் கூறவில்லை. நாம் கூட சென்னையை மெட்ராஸ் என்ற கூறுகிறோம். சிலசமயம் அதனை திருத்திக் கொள்கிறோம். எனவே, அண்ணாமலை பேச்சை அவ்வளவு உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.
