புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரசின் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி குறித்து வரும் 17ம் தேதி முடிவெடுக்கப்பட உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கட்சியின் தயார் நிலை மற்றும் வியூகம் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் சார்பில் உயர்மட்ட கூட்டம் வரும் 17ம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைப்புப் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால், மேற்கு வங்கப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் மற்றும் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபங்கர் சர்க்கார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதில், தேர்தலுக்கான கட்சியின் வியூகம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்றும் கூட்டணி குறித்தும் முடிவு செய்யப்பட இருக்கிறது. அடுத்த நாளான 18ம் தேதி கட்சியின் பரிசீலனைக் குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
