பண்ணாரி சோதனைச் சாவடி அருகே இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்.!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி சாலையில் அங்குமிங்கும் நடமாடுகின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே இன்று அதிகாலை காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையில் நடமாடியதோடு சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றன. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதை கண்டு அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினர்.

மேலும் யானைகள் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் சாலையோர வனப்பகுதிக்கு சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம் என வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: