சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி சாலையில் அங்குமிங்கும் நடமாடுகின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே இன்று அதிகாலை காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையில் நடமாடியதோடு சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றன. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதை கண்டு அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினர்.