கொளத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து 10 வெள்ளாடுகள் பலி

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூர் தார்காடு கிராமத்தில் உள்ளது செம்மலை ஏரி. இங்கு தனசேகரன் என்பவரின் தோட்டத்தில் குஞ்சப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் 10 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த தோட்டம் சிவிலிகரடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு ஒன்று அங்கிருந்த வெள்ளாடுகளின் கழுத்தில் கடித்ததில் 10 ஆடுகளும் உயிரிழந்தன.

இதனை இன்று காலை பார்த்த குஞ்சப்பன் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆடுகளை தாக்கியது சிறுத்தை புலி என்று கிராம மக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சிறுத்தை புலி புகுந்து ஆடுகளை கடித்துள்ளது. அப்போது கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயன்றனர். ஆனால் பிடிபடவில்லை. அதன்பின்னர் தற்போது சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: