பெண்களை மதிக்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல்

புதுடெல்லி:பெண்களை மதிக்க வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். டெல்லியில்  அனைத்து மகளிர் இருசக்கர வாகனப் பேரணியை  காணொலிக் காட்சி வாயிலாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,‘‘நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான நடைமுறைகளைக் கைவிடுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. இந்த அடிப்படைக் கடமையைச் செய்ய ஒவ்வொரு குடிமகனும்  பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.  பெண்களிடம் மரியாதையான நடத்தைக்கான அடித்தளத்தை குடும்பத்திலேயே மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தாயும் சகோதரியும் தங்கள் மகன் மற்றும் சகோதரனிடம் அனைத்துப் பெண்களுக்கும் மரியாதை அளிக்கும் விழுமியங்களைப் புகுத்த வேண்டும். அத்துடன் மாணவர்களிடையே பெண்கள் மீதான மரியாதை மற்றும்  கலாசாரத்தை வலுப்படுத்துவது ஆசிரியர்களின் பொறுப்பு. பெண்களுக்குத் தாயாகும் திறனை இயற்கை வழங்கியுள்ளது, தாய்மை அடைந்த பெண்ணுக்குத் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துவிடுகிறது. தடைகள் மற்றும் சவால்கள் இருந்த போதிலும் பெண்கள் தங்கள் துணிவு   மற்றும் திறமையின் வலிமையால்  புதிய சாதனைகளைப்  படைத்துள்ளனர்.

ஊடகங்களில் வரும் விளம்பரங்கள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முழுமையான எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நமது தேசத்தின் மகள்கள் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போதுதான் ‘தன்னம்பிக்கை இந்தியா’ மற்றும் ‘புதிய இந்தியா’ என்ற இலக்கை அடைய முடியும்’’ என்றார்.

Related Stories: