மும்பை: 5 அணிகள் பங்கேற்றுள்ள முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி.20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 8வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 19.3 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 52 ரன் (39 பந்து) எடுத்தார். உ.பி. பவுலிங்கில், சோஃபி எக்லெஸ்டோன் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய உ.பி. வாரியர்ஸ் 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 139 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்த அணியின் கேப்டன் அலிசா ஹீலி 96 (47 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்), தேவிகா வைத்யா 36 ரன் எடுத்தனர். அலிசா ஹீலி ஆட்டநாயகி விருது பெற்றார். 3 போட்டியில் உ.பி. 2வது வெற்றியை பெற்றது. ஆர்சிபி 4வது தோல்வியை சந்தித்தது.