ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலோர கிராமங்களில் மீன் உலர் தளங்கள் அமைத்து தர வேண்டும்: மீனவர்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கடலோர கிராமங்களில் மீன்களை உலர்த்துவதற்கு அரசு சார்பில் உலர் தளங்கள் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்திலேயே நீண்ட கடற்கரை கொண்ட பகுதி ராமநாதபுரம் மாவட்டம் ஆகும். இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன் வகைகள், பல்வேறு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டிற்கு ஏராளமான அன்னிய செலவாணி கிடைக்கின்றது. குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மோர்ப்பண்ணை, முற்றிலும் மீனவர்கள் வசிக்கும் கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் மோர்பண்ணை கடற்கரையில் இருந்து கடலுக்கு சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, தொண்டி, நம்புதாளை, சோளியக்குடி, புதுப்பட்டிணம் முள்ளிமுனை, காரங்காடு,, தேவிபட்டிணம், முனிவீரன்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள், இரவில் கடலுக்கு சென்று மீன்பிடித்து மறுநாள் காலை கரைக்கு திரும்புகின்றனர். மேலும் பலர் காலை கடலுக்கு சென்று இரவில் கரை திரும்புகின்றனர்.

கடலுக்கு செல்லும் போதே ஐஸ் கட்டிகளை வாங்கி, படகுகளில் எடுத்து செல்கின்றனர். பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் கட்டிகள் உள்ள பெட்டிகளில் போட்டு, பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வருகின்றனர். இந்த ஐஸ் பாக்ஸ்களில் கொண்டு வரப்படும் இறால், நண்டு, கணவாய் மீன்களை கரையில் இறங்கிய உடன் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் மீன் கம்பெனிகளை சேர்ந்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இதில் தரம் வாய்ந்த மீன்களை மட்டுமே, ஏற்றுமதி நிறுவன கம்பெனிகள் நேரடியாகவும், சிறு கம்பெனிகள் மூலமாகவும் கொள்முதல் செய்கின்றன.

மற்ற மீன்கள் ஆர்.எஸ்.மங்கலம். திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள மீன்களை மீனவர்கள் கெட்டு விடாமல் உப்பு கலந்து, கருவாடாக உலர்த்தி, விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் மீன்களை உலர்த்துவதற்கான உலர் தளங்கள் இல்லாததால், மீனவர்கள் வேறு வழியின்றி சாலையோரங்களில் மீன்களை கொட்டி காய வைக்கின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல் உலர்ந்த கருவாடுகளும் சுகாதாரமான முறையில் இருப்பதில்லை. எனவே மீன்களை உலர்த்துவதற்கு கடற்கரை பகுதியில் அரசு சார்பில் உலர் தளங்கள் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு கடந்த ஆட்சியில் மிகவும் குறைந்த பரப்பளவு கொண்ட இடத்தில் உலர்தளம் அமைத்து தந்தனர். அது முற்றிலும் சிதிலமடைந்து விட்டது. இதனால் மீன்களை கருவாடாக உலர்த்துவதற்கு இடம் இல்லாமல் சாலைகளிலும், நடைபாதைகளிலும் உலர வைக்கிறோம். மீன்களை சரியான முறையில் காய வைக்கா விட்டால் வீணாகி விடும். அதனை கீழேதான் கொட்ட வேண்டும். இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே மீனவர்களின் நலம் கருதி கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் உலர் தளங்கள் அமைத்து தர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: