புதுடெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசில் அடிசி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கல்வி, சுகாதாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கலால்துறை முறைகேடு வழக்கிலும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்கள். இதனால் டெல்லி ஆம்ஆத்மி அரசில் புதிய அமைச்சர்களாக அடிசி, சவுரப்பரத்வாஜ் ஆகியோரை நியமிக்க முதல்வர் கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். இதை ஏற்று ஜனாதிபதி அறிவிப்பு வெளியிட்டார்.