பாக். தீவிரவாத அமைப்பு மீதான தடை வாபஸ் இல்லை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்

வாஷிங்டன்: ``பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லாததால், அவற்றின் மீதான தடை வாபஸ் பெறப்படாது,’’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தலிபான் அமைப்பை அமெரிக்கா கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. அத்துடன் அதன் தலைவர்கள் ஹகிமுல்லா மெஷூத் மற்றும் வாலி உர்-ரஹ்மானையும் தீவிரவாத தலைவர்களாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடை செய்து அறிவித்தன.

இந்நிலையில், அமெரிக்க ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், அந்த இயக்கங்களின் தீவிரவாத நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ``சமீபத்தில் நடத்திய ஆய்வு மற்றும் அட்டர்னி ஜெனரல், நிதி அமைச்சகத்தின் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவற்றின் மீதான தடையை அமெரிக்கா வாபஸ் பெறாது,’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Stories: