திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே காவிரி பாலம் உள்ளது. திருச்சி- ரங்கத்தை இணைக்கும் இந்த பாலம் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் கனரக வாகனங்கள் கடந்து செல்லும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகமானது. எனவே காவிரி பாலத்தை விரைந்து சீரமைக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் காவிரி பாலத்தை சீரமைக்க ரூ.6.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த செப்டம்பரில் பராமரிப்பு பணிகள் துவங்கியது. இதன் எதிரொலியாக காவிரி பாலத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் நீங்கலாக அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. நவம்பர் 20ம் தேதி முதல் காவிரி பாலம் முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.