தேவையான மக்களுக்கு இலவசங்களை அளிக்கிறோம் ஒரே நாடு, ஒரே தேர்தல் மாநிலங்களுக்கு பயன்: குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் பேட்டி

காந்திநகர்: நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மாநிலங்களுக்கு பயன் தரும் என்றும், தேவையான மக்களுக்கு இலவசங்களை அளிப்பதாகவும் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் தெரிவித்தார்.குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல், காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் தமிழ் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை நேற்றிரவு சந்தித்தார். அப்போது, நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

குஜராத் மாநிலத்தில் நிதி மேலாண்மை சிறப்பான முறையில் கையாளப்பட்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். சமூகத்தில் தேவையானவர்களுக்கு மட்டுமே இலவசங்களை நாங்கள் வழங்கி வருகிறோம். இதனால், நிதி பற்றாக்குறை என்பது எங்களுக்கு கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக குஜராத் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. புதுப்பிக்கத்தக்க எரி சக்தி பயன்பட்டால் இத்தகைய இலக்கை நாங்கள் அடைந்துள்ளோம்.

நாங்கள் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்தாலும், நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மாநிலங்களுக்கு பயன் அளிக்க கூடியதாக இருக்கும். வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் நான் பிரசாரம் செய்வேனா என கேள்வி எழுப்புகின்றனர். தமிழில் பேச தெரியாததால் தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் வருகை தர முடியாது.

இவ்வாறு அவர தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளான முதல்வரின் தலைமை முதன்மை செயலாளர் கயிலாசன்நாதன், வருவாய்த்துறை செயலாளர் ஸ்வரூப், மோடி பிறந்த மாவட்டம் மெக்சானா மாவட்ட கலெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories: