காசர்கோடு அருகே கிரைண்டரில் துப்பட்டா சிக்கி இளம்பெண் பரிதாப சாவு: பிறந்த நாளில் சோகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே பேக்கரியில் பணியில் இருந்தபோது கிரைண்டரில் சுடிதார் துப்பட்டா சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள தலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன். அவரது மனைவி ஜெயஷீலா (24). 2 பேருக்கும் கடந்த வருடம் தான் திருமணம் நடந்தது. ஜெயஷீலா வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல பணிக்கு சென்று இருந்தார்.

அப்போது அங்குள்ள ஒரு பெரிய கிரைண்டரில் அவர் மாவு குழைத்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஜெயஷீலாவின் சுடிதார் துப்பட்டா கிரைண்டரில் சிக்கியது. இதில் கீழே விழுந்தவர் பலத்த காயமடைமடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயஷீலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தலப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயஷீலாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: