நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரயில்வே கோட்ட மேலாளர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆர்ஜித நிலத்திற்கு இழப்பீடு தராததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ரயில்வே கோட்ட மேலாளர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி அருகே முல்லிப்பாடி கருத்தனம்பட்டியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராஜூ, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் - விழுப்புரம் இடையே ரயில்வே தண்டவாளம் அகலப்படுத்தும் பணி துவக்கப்பட்டது. இதற்காக எனக்கு சொந்தமான 35  சென்ட் நிலம் 2013ல் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்த வழக்கில் 12 வாரத்திற்குள் உரிய இழப்பீட்டை வழங்க 2021ல் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆனாலும் வழங்கப்படவில்லை. எனவே, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் அனந்த், உதவி கோட்ட மேலாளர் நாராயணன், திண்டுக்கல் நிலைய மூத்த பிரிவு மேலாளர் குமரவேல் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், வெளிப்படையான இழப்பீடு வழங்கும் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: