வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் குவிந்த கால்நடைகள்-₹50 லட்சம் தாண்டிய வர்த்தகம்

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் வழக்கத்தை விட அதிகளவில் கால்நடைகள் குவிந்தன. இதனால் ₹50 லட்சம் தாண்டிய வர்த்தகம் ஏற்பட்டது.

தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கால்நடை சந்தையில் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்தது. அதை தொடர்ந்து கடந்த வாரமும் மாட்டுச்சந்தை களைக்கட்டியது.

இதற்கு தீவனம் தாராளமாக  கிடைப்பதே காரணம். நேற்று கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் மாட்டுச்சந்தை களைக்கட்டியது. அதற்கேற்ப பொய்கை மாட்டுச்சந்தையில் வர்த்தகமும் ஏறத்தாழ ₹50 லட்சம் தாண்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: