சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். உள்நாட்டு போர் நடந்த போது தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். நான் கரூர் கோடாங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்தேன். கல்லூரி படிப்பை முடித்துள்ளேன். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லவுள்ளதால், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தேன். நான் இந்திய குடிமகன் இல்லை எனக் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து எனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 20ல் இந்திய குடிமகன் அல்லாதோருக்கு பாஸ்பார்ட் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் பொதுநலன் கருதி, அரசு நினைத்தால் இந்திய குடிமகன் அல்லாதோருக்கும் பாஸ்போர்ட் வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் தற்போது இலங்கை குடிமகனும் அல்ல. இந்திய குடிமகனும் அல்ல. வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்கிறார். எனவே, பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 20ன் கீழ் பாஸ்போர்ட் வழங்கலாம். மனுதாரர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதை மத்திய உள்துறை செயலாளர் பரிசீலித்து விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: