புதுடெல்லி: ‘பங்குச்சந்தையில் மோசடி என வெளியான அறிக்கை இந்தியா மீதான தாக்குதல்’ என அதானி குழுமம் கூறிய குற்றச்சாட்டுக்கு, ‘தேசியவாதத்தால் மோசடிகளை மறைக்க முடியாது’ என ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி தந்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத மோசடிகளை செய்ததாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 24ம் தேதி அறிக்கை வெளியிட்டது. 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக பல்வேறு ஆதாரங்களை வெளியிட்ட அந்நிறுவனம், அறிக்கையில் 88 கேள்விகளை எழுப்பி இருந்தது. இதன் காரணமாக பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
இந்த குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம் நேற்று முன்தினம் 413 பக்க அறிக்கையில் ஹிண்டன்பர்க் கேட்ட 88 கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தது. அதில், ‘ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. நாங்கள் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாக கூறுவதில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மறைமுக நோக்கத்துடனேயே ஹிண்டன்பர்க் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘ஷார்ட் செல்லர்’ ஆன ஹிண்டன்பர்க், மற்ற நிறுவனங்களின் பங்குகளை வீழ்ச்சி அடையச் செய்து, அதன் மூலம் லாபம் அடைவதை நோக்கமாக கொண்டிருக்கும் நிறுவனமாகும். இது இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்கள், வளர்ந்து வரும் தேசத்தின் மீதான கணக்கிடப்பட்ட தாக்குதல். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் முழுக்க பொய்யே தவிர வேறொன்றுமில்லை’ என கூறப்பட்டுள்ளது.