காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா: பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் நடந்த ரதசப்தமி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில்,  தை அமாவாசை  நாளை அடுத்து 7வது நாளில்  ரத சப்தமி கொண்டாடப்படுவது வழக்கம். சூரிய தேவன் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது.

இந்த நாள் சூரிய கடவுளின் பிறந்த நாளாகவும் கருத்தப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமியாகும். இது பருவங்களின் அடிப்படையில் வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. விவசாயிகளூக்கு இந்த நாள் புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது.

இந்து சமய குடும்பங்களிலும், சூரிய கடவுள் உள்ள கோயில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சூரியன் உதிக்கும் நேரத்தில் ஆரம்பித்து சூரியன் மறையும் நேரம் வரை பல்வேறு அலங்கார வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ரத சப்தமி விழா மிகவும் சிறப்பாக நடந்தது.  விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சணம், சிறப்பு பூஜைகள் நடந்தது. சிகப்பு பட்டுத்தி பச்சை நிற, மஞ்சள் நிற பூமாலைகள், பஞ்சவர்ண மாலை அணிந்து, தங்க சூரிய பிரபை வாகனத்தில் வரதராஜபெருமாள் எழுந்தருளினார். பின்னர், மேளதாளங்கள் முழங்க மாடவீதிகளில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி, ஆராதனை  எடுத்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: