இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த புதிய மனுவின் முறையீட்டை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதால் எங்களது தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம். ஆனால் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை வேட்பாளர் படிவத்தில் போடுவதற்கு மற்றும் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.

அதனால் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தையும் எங்களது தரப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின் அறிவுறுத்தலின் படி மேற்கண்ட கோரிக்கை கொண்ட மனுவை எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வின் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியின் புதிய மனுவானது முறையீட்டு பட்டியலில் மூன்றாவது எண்ணாக நாளை பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories: