க்ரோக் ஆபாச ஏஐ படங்கள் விவகாரம் ‘எக்ஸ்’ அறிக்கை சமர்ப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பிரபல சமூக ஊடகமான எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான க்ரோக்-ஐ பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. க்ரோக் செயற்கை நுண்ணறிவில் கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு க்ரோக் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்களை எக்ஸ் நீக்க வேண்டும்.

இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றுவதை எக்ஸ் தளம் உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற ஆபாச மற்றும் சட்ட விரோத கன்டென்ட்களை க்ரோக் ஏஐ மூலம் உருவாக்கம் செய்வதை தடுக்கும் வகையிலான கட்டமைப்புகளை உறுதி செய்ய வேண்டும். அதை மீறும் பயனர்களின் கணக்கை முழுமையாக முடக்க வேண்டும்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 72 மணி நேரத்தில் விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும். தவறினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2ம் தேதி எக்ஸ் தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, க்ரோக்கை சட்டவிரோதமாக பயன்படுத்துவர்கள் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என்றும், ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்குவது, உள்ளடக்கத்தைப் பதிவேற்றிய கணக்குகளை நிரந்தரமாக முடக்குவது, உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றின் மூலம் ஆபாச, சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு எதிராகச் செயல்படும் என்று எக்ஸ் கூறியது.

மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க எக்ஸ் தளம் கூடுதல் அவகாசம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இன்று வரையிலும் அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

Related Stories: