உக்ரைனுக்கு மீண்டும் அமெரிக்கா உதவி: 31 அதிநவீன பீரங்கிகளை அனுப்புவதாக அறிவிப்பு

வாஷிங்டன்: ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு 31 அதிநவீன எம்1 ஆப்ராம்ஸ் ரக பீரங்கிகளை அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்தார். இதேபோல் ஜெர்மனியும் பீரங்கிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்  ரஷ்யா போர் இன்னும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் உக்ரைனுக்கு அதிநவீன போர்க் கருவிகளை அனுப்பி ராணுவ ரீதியாகவும் உதவி வருகிறது.

அந்த வகையில், உக்ரைனுக்கு 31 அதிநவீன எம்1 ஆப்ராம்ஸ் ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவி செய்வது குறித்து ஜெர்மன் அதிபர் ஒலாப் ஷால்ஸ், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருடன் ஜோ பைடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைதொடர்ந்து, உக்ரைனுக்கு அதிநவீன எம்1 ஆப்ராம்ஸ் ரக பீரங்கிகளை அமெரிக்கா அனுப்பும்” என்று ஜோ பைடன் கூறியுள்ளார். இதேபோல், ஜெர்மனியும் உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்ப உள்ளது.

பெர்லினில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டபின் நிருபர்களிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஒலாப் ஷால்ஸ் கூறியதாவது, “கொள்கை அடிப்படையில் உக்ரைனுக்கு லெப்பர்ட்-2 ரக பீரங்கிகளை ஜெர்மன் அனுப்பும்” என்றார். இதனிடையே, நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஆளில்லா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யா ஏவிய 15 குரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.  இந்த தாக்குதலால் கீவ் நகரம் முழுவதும் போர் வாகனங்களின் சைரன் சப்தங்கள் கேட்டது.

Related Stories: