திருமணத்தின் போது குட்டு அம்பலம்: கேரளாவில் பரபரப்பு; 5 வருடமாக சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கடை ஓனர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் முகம்மது நிசாம்(47). இவர் அப்பகுதியில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 வயது முதல் நிசாமின் கடையில் வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் நிசாம் பண ஆசை காட்டி அவரை பலமுறை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகமானதை தொடர்ந்து அந்த சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

பின்னர் அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்ற நிசாம், இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி கட்டாயப்படுத்தி மீண்டும் வேலைக்கு வர வைத்துள்ளார். ஆனால் மீண்டும் அவரை மிரட்டி நிசாம் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் 21 வயதான அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டினர் தீர்மானித்தனர். தனக்குத் தெரிந்த ஒரு வாலிபர் இருப்பதாக கூறி அந்த நபருக்கு நிசாமின் ஏற்பாட்டின் பேரில் இளம்பெண்ணுடன் திருமணம் நடத்தப்பட்டது. கடந்த மாதம் டிசம்பர் 18ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இளம்பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விசாரித்தபோது தான் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அவரை கடை உரிமையாளர் நிசாம் பலாத்காரம் செய்து வந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த விவரம் இளம்பெண்ணின் உறவினர்களுக்கும், அப்பகுதியினருக்கும் தெரியவந்தது.

ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நிசாமை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த நிசாமை போலீசார் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.  சிகிச்சைக்குப் பின் போலீசார் அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: