சிறுமலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் அதிக பனிமூட்டம் காரணமாக பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 15 பயணிகள் காயம்

திண்டுக்கல்: அதிக பனிமூட்டம் மற்றும் தூரல் காரணமாக பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதி முழுவதும் விவசாய சார்ந்த பகுதியாக உள்ளது. இப்பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து காலை 5.15 மணிக்கு அரசு பேருந்து சிறுமலை நோக்கி சென்றது. இந்த பேருந்து சிறுமலையை நோக்கிச் சென்ற போது 18 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அதிக அளவு பனிமூட்டம் மற்றும் தூரல் காரணமாக சாலை முற்றிலும் தெரியவில்லை.

இதன் காரணமாக பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட சிறுமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், பழனி அம்மாள், கோபால், பாஸ்கரன் ,கார்த்தி, கணேசன் உட்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர். விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: