சென்னை: வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளை சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள், சங்கப்பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். தொடர்ந்து, இன்று (24ம் தேதி) திருநெல்வேலியிலும், 28ம் தேதி சிவகங்கையிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.