உதவி இயக்குனருக்கு உதவிய ரிஷப் ஷெட்டி

பெங்களூர்: தனது உதவி இயக்குனருக்கு உதவும் வகையில் அவரது படத்தில் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா படத்தில் ஹீரோவாக நடித்து, அந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். ரூ.8 கோடியில் உருவான அந்த படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இப்போது ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோவும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி அடுத்த என்ன படத்தில் நடிப்பார் என சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர் சத்தம் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அது தனது உதவியாளராக இருந்த நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படமாகும்.

கன்னடத்தில் ஹாஸ்டல் குடுகாடு பெடகிட்டாரே என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். இது கல்லூரி காலத்தில் மாணவர்கள் இடையே ஏற்படும் நட்பை சொல்லும் மென்மையான கதை கொண்ட படமாகும். இதில் கல்லூரி மாணவர்கள் சிலர் இப்போது 30 வயதை கடந்து, குடும்பம், அலுவலகம் என பிசியாக இருக்கிறார்கள். இந்நேரத்தில் அவர்கள் மீண்டும் ஓரிடத்தில் கூடுகிறார்கள். அதில் ஒரு முன்னாள் மாணவராக ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். அவருடன் கன்னட ஹீரோ ஷைன் ஷெட்டி, பிரபல இயக்குனர் பவன் குமார் ஆகியோரும் முன்னாள் மாணவர்களாக நடிக்கிறார்கள். உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டதால் சம்பளம் வாங்காமல் இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கிறாராம்.

Related Stories: