ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ₹21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் வழங்கினார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ₹21 லட்சத்து 38 ஆயிரத்து 960 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி மேயர் சத்யா, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத்(ராணிப்பேட்டை), ஹரிணி தில்லை(வாலாஜா), ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் வரவேற்றார்.  இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 63 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹21 லட்சத்து 38 ஆயிரத்து 960 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான விழாவில் கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து அதன் துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக நிர்வாகித்து வருகிறார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களின் நிலை மிகவும் கடினமானது. மேலும், குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க பெற்றோர்கள் பெரும்பாடு படுகின்றனர்.  அதேபோல், சிறப்பு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளை தங்களது குழந்தைகளாக பாவித்து அன்பு, அரவணைப்புடன் பாதுகாத்து வருகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மாற்றுத்திறனாளிக்கு ஒரு உதவி தேவை என்றால் அதனை அரசு திட்டத்தின் மூலமாகவோ அல்லது எனது சொந்த செலவின் மூலமாகவோ உதவி செய்வதை நான் மட்டுமல்லாமல் எனது குடும்பத்தின்  பாக்கியமாக கருதுகிறேன். மேல்விஷாரம் சாதிக்பாஷா நகரில் குடியிருந்து வீடு இழந்த அனைவருக்கும் விரைவில் பட்டா வழங்கப்பட்டு வீடு கட்டி தரப்படும். ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கியதில் முன்னோடியாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், மாவட்ட கலெக்டர் பாஸ்கார பாண்டியன்  பேசுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இதுவரை 16 ஆயிரத்து 834 பயனாளிகளுக்கு ₹8 கோடியே 33 லட்சத்து 520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. செயற்கை கால் திட்டத்தின் கீழ் 104 பயனாளிகளுக்கு ₹98 லட்சத்து 99 ஆயிரத்து 500 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ேமலும், மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகையாக 2 ஆயிரத்து 268 பயனாளிகளுக்கு ₹5 கோடி 44 லட்சத்து 32 அயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 397 பயனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 924 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 983 நபர்களுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 101 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 100 பயனாளிகளுக்கு காதொலி கருவி, 92 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் என 16 ஆயிரத்து 834 பயனாளிகளுக்கு ₹18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக செயல்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள், 36 தன்னார்வலர்கள் ஆகியோரின் பணியை பாராட்டி அமைச்சர் ஆர்.காந்தி கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை நகரமன்ற துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, திமுக நகர செயலாளர் பூங்காவனம் கவுன்சிலர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், கோபி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: