நானே சென்று அதிகாரிகளுடன் ஆலோசிப்பேன் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் ஆய்வு: தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தென்காசி: தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் ஆய்வு நடத்தி அரசு திட்டப் பணிகளை முடுக்கி விட திட்டமிட்டுள்ளதாக தென்காசியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தென்காசியில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.239 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொழில் வளர்ச்சியா, சிறுதொழில் மேம்பாடா, கல்வியா, சுகாதாரமா, உள்கட்டமைப்புப் பணிகளா, மகளிர் மேம்பாடா, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடா, இளைஞர் நலனா, விளையாட்டா, அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்டி வருவது  மட்டுமல்ல, அந்தத் திட்டங்களால் தமிழகம் உயர்ந்து வருவதை கண்ணுக்கு முன்னால் நான் பார்க்கிறேன்.

இவை அனைத்தும் தமிழகம் உயர்ந்து வருகிறது, எல்லாத்  துறையிலும் உயர்ந்து வருகிறது, எல்லாப் பிரிவினரையும் உயர்த்தி வருகிறது என்பதற்கான திட்டவட்டமான சான்றுகளாக அமைந்திருக்கிறது. திட்டங்களால் பயனடைந்த மக்களுடைய மனங்களில் உருவாகி வரும் மகிழ்ச்சியை நான்  பார்க்கிறேன். திட்டமிடுவது, திட்டமிட்டதை செயல்படுத்திக் காட்டுவது, அதை நிறைவேற்றுவதுதான் என்னுடைய நாள் தோறும் பணியாக இருக்கிறது. திட்டத்தை அறிவித்தோம், நிதியை ஒதுக்கினோம், அதோடு கடமை முடிந்து விட்டது என்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் நான் அதைக் கண்காணிக்கிறேன்.

அடுத்தகட்டமாக, மாவட்டம் வாரியாக, இந்தத் திட்டப்பணிகள் குறித்து குறிப்பிட்ட மாவட்டத்திற்கு  நான் வந்து ஆய்வு நடத்தத் திட்டமிருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும்  அறிவிக்கப்பட்ட பணிகள் நடைபெறுவதை நானே பார்த்து - அந்தப் பணிகளை முடுக்கி விட இருக்கிறேன். அமைச்சர்களை உடன் வைத்துக்கொண்டு, அதிகாரிகள், அலுவலர்களை நேரில் அழைத்துப் பேச இருக்கிறேன். நாங்கள் என்ன நோக்கத்திற்காக இந்தத் திட்டங்களைத் தீட்டித் தருகிறோமோ அதே நோக்கம் கடைநிலை அலுவலர்கள் வரை இருந்தால்தான் அந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமை அடையும். மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடம் இருந்து கற்றுக் கொள் என்று சொன்னார் அண்ணா. அப்படி மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்படும் என்றார்.

* முதல்வரை கவர்ந்த கண்காட்சி அரங்கு

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மண்பாண்ட பொருட்கள் நேரடியாக செய்வது, கார்மென்ட்ஸ் மெகா கிளஸ்டர் மூலம் மீண்டும் மஞ்சப்பை தயாரித்தல், தோட்டக்கலை துறை சார்பில் ‘அகஸ்தியர் உருவமும் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்ற வண்ணம் தர்பூசணி பழத்தில் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவங்களும், காய்கறிகளால் ஆன பறவைகள் மற்றும் மலர் உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் விளையும் அரிய வகை பழங்கள், பாரம்பரிய காய்கறிகள், வாசனை திரவியப் பொருட்கள் மற்றும் மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டது. குற்றால மலையின் சிறப்புகளை, குற்றால குறவஞ்சி பாடலை சுட்டிக் காட்டி வாயாரப் புகழ்ந்தார்.

* கலைஞர் ஆட்சியில் மணிமண்டபம்

வீரத்தின் விளைநிலமாக இருக்கும் பூலித்தேவன் மண் இது. 1998ம் ஆண்டு நெற்கட்டான்செவலில் மாவீரன் பூலித்தேவனுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்துக் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர்.வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஒரு குழந்தை எழுதிய அந்தக் கடிதத்தை படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. பள்ளியில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தச் சிறுமியை, வாழ்த்துகிறேன் என்றார்.

Related Stories: