ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு எழுதிய கடிதம்: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்கறிஞரை அணுகி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றங்கள் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுபவர்களின் ஜாமீனையும் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.

சமூகத்தை பாதிக்கும் கடுமையான குற்றங்களில், உரிய காலக் கெடுவிற்குள் புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறுவதால் குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெற வழி ஏற்படுகிறது. இதை தடுக்க கடுமையான குற்ற வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி, புலன் விசாரணை செய்து உரிய காலக் கெடுவிற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதுடன் வழக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும். ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் சாட்சிகளை கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் காவல் துறையினர் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.

The post ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: