நாட்டை பாதுகாக்கும் உணர்வுடன் இருப்பவர்கள் ராணுவத்திற்கு தேவை: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கருத்து

மதுரை: மதுரையை சேர்ந்த எஸ்.அஜய் ஜஸ்டிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிளஸ் 2 முடித்து 2007ல் ராணுவத்தில் சேர்ந்தேன். பயிற்சிக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் 2009ல் பங்கேற்றபோது எனக்கு கழுத்து மற்றும் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு என்னை பணியில் சேர்க்கவில்லை. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரரின் கோரிக்கை, இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற அவரது கனவு மற்றும் ஆர்வத்தை காட்டுகிறது. நாட்டிற்காக சேவையாற்றும், நாட்டை பாதுகாக்கும் கனவுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர்கள் நாட்டிற்கு தேவை. எனவே, மனுதாரரின் சட்டப்படிப்பை கருத்தில் கொண்டு, அவரை ஜேஏஜி திட்டத்தில் (சட்டம் தொடர்பான பணி) சேர்க்க பரிசீலிக்க வேண்டும்.  மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருத்தில் கொண்டு, மனுதாரர் ராணுவத்தில் ஜேஏஜி திட்டத்தில் சேர்க்கப்படுவார் என நீதிமன்றம் நம்புகிறது’’ என கூறியுள்ளார்.

Related Stories: